கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அரிசி கடத்தல் , போலி மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய எஸ்பி தலைமையிலான தனிப்படையினர் ஒரே நாளில் குற்றவாளிகளை கைது செய்தனர். இதனால் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது. இதற்கிடையில் கஞ்சா விற்பனை காரணமாக பல்வேறு குற்ற சம்பவங்கள் மாவட்டத்தில் அதிகரித்து வருவதை உணர்ந்த எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்டம் முழுவதும் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதில் கடந்த இரண்டு நாள்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களிலும் பொது அமைதியை கெடுக்கும் கெட்ட நடத்தைகாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
நேற்று மட்டும் நாகர்கோவில் உட்கோட்டத்தில் 11 நபர்கள் மீதும், தக்கலை உட்கோட்டத்தில் 10 நபர்கள் மீதும், குளச்சல் உட்கோட்டத்தில் 4 நபர்கள் மீதும், கன்னியாகுமரி உட்கோட்டத்தில் 6 நபர்கள் என மொத்தம் 31 நபர்கள் மீது நன்னடத்தை பிணையம் பெற்று அவர்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 10 நாட்களில் 48 நபர்கள் மீது நன்னடத்தை பிணையம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஸ்பி பத்ரிநாராயணனின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் குற்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
இதையும் படிங்க:
திருமணத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை: ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை!