கன்னியாகுமரி அருகே சுக்குபாறை தேரிவிளையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி வந்தார். துறைமுகம் அமைப்பதற்காக இடம் பார்க்க வந்தார் என்று சிலர் கூறுகிறார்கள். அது உண்மையாக இருக்காது என்பதே என் கருத்து. அவர் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தை பார்வையிடக்கூட வந்திருக்கலாம்.
கன்னியாகுமரியில் கடலில் கல்லைப்போட்டு நிரப்பி துறைமுகம் கொண்டு வருவது சாத்தியமில்லை. ஒரு போதும் இந்த தொகுதியில் பெட்டக துறைமுகம் வராது. மேலும் மத்திய அரசின் மோசமான நிதிக்கொள்கையால் பலர் வேலையிழந்துள்ளனர். இந்தியாவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு நாசமாய் போய்க்கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.