கன்னியாகுமரி: மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணைப்படி, நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) என்ற நிறுவனம், தமிழகத்திற்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு மற்றும் நிலப்பயன்பாட்டு வரைபடங்களை தயாரித்துள்ளது. இந்த வரைபடங்கள் முழுமையாக இல்லை என்றும், இத்திட்டம் மீனவர்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளது என்றும் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி காலனி வரை சுமார் 72 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரையில், 48 மீனவ கிராமங்கள் உள்ளன. ஆனால், இந்த கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தில் பள்ளம், முட்டம் உள்ளிட்ட 7 கிராமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 41 மீனவ கிராமங்கள் வரைபடத்தில் இல்லை. மீனவர்களின் மேம்பாட்டுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அதில் மீனவ கிராமங்கள் விடுபட்டுள்ளது மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 24) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து 150-க்கும் மேற்பட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய உடனேயே வரைபடத்தில் பல்வேறு மீனவ கிராமங்களின் பெயர்கள் இடம் பெறாதது குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில், தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பின் நிர்வாகி சர்ச்சில் பேசும்போது, "இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் வரைபடம் தயாரித்துள்ளது. இந்த வரை படத்தில் 48 கடற்கரை கிராமங்களில் 41 கடற்கரை கிராமங்கள் மாயமாகி உள்ளன. சர்வதேச சுற்றுலா இடமான கன்னியாகுமரியும், நெத்திலி மீனுக்கு பெயர் பெற்ற கோவளம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முதல் வெற்றி பெற்ற தந்த குளச்சல் கிராமம்- அங்குள்ள போர் நினைவு சின்னம் மற்றும் குளச்சலில் அமைந்துள்ள மீன்வளத் துறை அலுவலகம் கூட குறிப்பிடப்படவில்லை. ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு பெயர் பெற்ற தூத்தூர் முதலான 41 மீன்பிடி கிராமங்கள் வரைபடத்தில் தவிர்க்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த வரைபடத்தில் மீனவர்களுடைய கிராமங்களோ, வாழ்விடங்களோ, வாழ்வாதார இடங்களோ, மீன்பிடி படகுகள் நிறுத்தும் இடங்களோ, கடலில் மீன்கள் உற்பத்தியாகும் இடங்கள் மற்றும் கரையில் மீனவர்களது தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், மீனவர் நினைவிடங்கள் இடங்கள் என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இதற்கு முழு பொறுப்பை குமரி மாவட்ட நிர்வாகமும், குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளும் ஏற்க வேண்டும். ஏனென்றால் கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2011-ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று மீனவர்கள் உட்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு கடற்கரை மேலாண்மை மண்டல மற்றும் ஒழுங்குமுறை மண்டல திட்டங்கள், ஆய்வுகள் செய்கின்ற பொழுது இந்த குழுக்களுடன் சேர்ந்தே செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், குமரி மாவட்டத்தில் இதுவரையும் இந்த மூன்று மீனவர் உட்பட்ட குழுக்கள் முறையாக அமைக்கப்படவில்லை, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவும் இல்லை.
மாவட்ட ஆட்சியர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட கடற்கரை மேலாண்மை வரைபட திட்ட வழக்கில் நீதி அரசர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்களது பயன்பாட்டு இடங்கள், வாழ்வாதாரங்கள், குடியிருப்புகள் மீன் இறக்கும் தளங்கள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன்பிடி கருவிகள் நிறுத்தும் இடங்கள் என்று மீனவர்கள் பயன்பாட்டுக்கு உரிய இடத்தை அறிக்கையாக சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக மீன்வளத்துறை ஆணையர் ஜூன் மாதம் 12ஆம் தேதியே ஒவ்வொரு மீன்வளத்துறை உதவி ஆய்வாளர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தின்படி மீனவர்கள் பயன்பாட்டு இடங்களை உடனடியாக முறையாக வரைபடமாக வரைந்து அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இதுவரையும் மீன்வளத்துறை அதிகாரிகள் அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாணவ மாணவிகளின் கல்வி, குடும்ப அட்டை பயன்படுத்துகின்ற இடங்கள், மீனவர்கள் வங்கி கடன் உதவி பெறுதல் உள்ளிட்ட அனைத்திற்கும் இந்த வரைபடத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் அவசியமாகிறது. ஆனால், அந்த வரைபடத்தில் 41 மீனவ கிராமங்களையும் மீனவர்களையும் விட்டுவிட்டதால் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. இதனை திருத்தம் செய்து வாங்க வேண்டிய தமிழக அரசும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை" என்று ஆவேசமாக கூறினார்.
மீனவ சங்க பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறினர். மாவட்ட ஆட்சியர் முன்பு, மீனவ சங்கத்தினர் அதிகாரிகளிடம் விவாதித்ததால் சற்று நேரம் அங்கு பதற்றம் நிலவியது.