குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. மழை எதுவும் பெய்யாததால், அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் தவித்து வந்தனர். மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் ஆங்காங்கே தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில், கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 7.6 மில்லி மீட்டர் மழையும், கன்னிமார் பகுதியில் 7.4 மில்லி மீட்டர் மழையும், மயிலாடியில் 7.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பூதப்பாண்டியில் 5.2 மில்லி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் தொடர்ந்து காலை முதல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!