கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே சந்தவிளை பகுதியில் புத்தனார் கால்வாய் ஓரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. தாழக்குடி, செண்பகராமன்புதூர், சந்தவிளை அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் இங்கு வந்து மதுக்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் பார்வதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் மருதப்பன். கூலித் தொழிலாளியான இவர் நேற்று( ஜூன் 7) இரவு இந்த டாஸ்மார்க் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளார்.
அதன்பின் மது பாட்டில் ஒன்றை வாங்கி வீட்டிற்கு திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் புத்தனார் கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டு இருந்து.
இந்நிலையில், மது போதையில் இருந்த மருதப்பன், புத்தனார் கால்வாயை கடக்க முயன்ற போது கால் தவறி கால்வாயினுள் விழுந்துள்ளார். இதில் மருதப்பன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று மருதப்பன் உடல் கால்வாய் கரையில் ஒதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மது போதையில் கால்வாயை கடக்க முயன்று கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது கால்வாய் கரையோரம் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மது அருந்தி கார் ஓட்டி விபத்து: தொழிலதிபர் உயிரிழப்பு