உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி பரவி லட்சக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துவருகின்றனர். இந்தியாவிலும் கரோனா தீநுண்மியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கரோனா தீநுண்மி அழிந்து உலகத்தில் உள்ள மக்கள் நலம்பெற வேண்டி குமரி மாவட்டம் மருந்துவாழ் மலை அடிவாரத்திலுள்ள புன்னார்குளத்தில் சுமங்கலிகள் முன்னிலையில் 58 பசுக்களைக் கொண்டு மகா கோ பூஜை நடைபெற்றது.
இதில் கலப்பை மக்கள் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான பி.டி. செல்வகுமார், காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்த்ராலய குரு தபஸ்வி பொன் காமராஜ் சுவாமிகள், சுமங்கலி பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பூஜைக்குப் பின்னர் பி.டி. செல்வகுமார் செய்தியாளர்களிடம், "உலகம் முழுவதும் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவிவருகிறது. இந்தத் தீநுண்மி அழிந்து உலக மக்கள் சுபிட்சம் பெற இந்த மகா கோ பூஜை நடத்தப்படுகிறது.
கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட மக்கள் பெருந்தொற்றிலிருந்து மீள முடியாது என்ற பயத்தையும், பதற்றத்தையும் விடுத்து தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
மேலும், சிறு, குறு தொழில்கள் செய்கின்றவர்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். அரசு அவர்களுக்குத் தன்னம்பிக்கையை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். பசி பட்டினியால் யாரும் இறக்கக் கூடாது" எனக் கூறினார்.