டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி, குமரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோர மீனவ கிராமங்கள் வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள், அசம்பாவிதங்கள் போன்றவற்றைத் தடுக்கும் பொருட்டு பலகட்டப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடலோரக் காவல் படை எடுத்து வருகிறது.
அதில் ஒரு பகுதியாக, ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை பகுதிகள், மீனவ கிராமங்களில் ‘ஆபரேஷன் சவுகஸ்’ (OPERATION CHAUKAS) என்ற பெயரில் மூன்று நாட்கள் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புப் படை காவல் துறையினர் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள் அதிவிரைவு ரோந்து படகுகள், தொலை நோக்கிக் கருவிகள் மூலமாக கடல், கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், ஆழ்கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் படகுகள் காணப்பட்டாலோ, அடையாளம் தெரியாத ஆட்கள் தென்பட்டாலோ உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகையானது, 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. மேலும் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களும், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.