கன்னியாகுமரி மாவட்டம், இனயம் கடற்கரை கிராமத்தில் வீட்டில் உள்ள கழிவு நீர் செல்வதில் இரு வீட்டார் இடையே ஏற்பட்ட பிரச்னையில் 8 மாத கர்ப்பிணியை, பக்கத்து வீட்டுக்காரர் தாக்கியதால் வலி ஏற்பட்டு கருவில் இருக்கும் குழந்தையின் நாடி துடிப்பு குறைந்துள்ளதாக கர்ப்பிணி வேதனைத்தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகாரளித்தும் 4 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணி கண்ணீர் மல்க கவலை தெரிவித்துள்ளார்.
தற்போது 8 மாத கர்ப்பிணியான சர்மிளாவிற்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்குமிடையே வீட்டின் கழிவுநீரை வெளியேற்றுவதில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பக்கத்து வீட்டைச்சேர்ந்த அந்தோணி மற்றும் அவர் குடும்பத்தார் அத்துமீறி தன்னை அடித்து, கழுத்தை நெரித்து, கீழே தாக்கியுள்ளதாக கர்ப்பிணி சர்மிளா கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இதனால், இடுப்பு வலி வந்து இது சம்பந்தமாக மருத்துவமனைக்குச் சென்றபோது, குழந்தையின் நாடித்துடிப்பு குறைந்து உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார். இவ்வாறு அந்தோணி மற்றும் அவர் குடும்பத்தார் அத்துமீறி தாக்கியது குறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் கொடுத்தும் 4 நாட்களான நிலையில், இன்று (ஜுன் 5) வரையில் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குளச்சல் அரசு மருத்துவமனையில் கண்ணீர் மல்கக் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க குற்றவியல் சட்டங்கள் இருந்தும் கூட பாதிக்கப்பட்ட சர்மிளாவின் புகார் மீது கூட போலீசார் நடவடிக்கை எடுக்காதது இனயம் மீனவர் கிராமத்தில் மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் கார் ஓட்டுநர் படுகொலை; கேரளாவில் பதுங்கிய 7ஆவது குற்றவாளி கைது!