தமிழ்நாடு முழுவதும் உள்ள 45 லட்சம் ஓட்டுநர்களின் நலன்கருதி, சாலை வரி விலக்கு, வட்டியில்லா கடன் தொகையை செலுத்த கால அவகாசம், நிவாரணத்தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய ஓட்டுநர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மனுவில்; 'தமிழ்நாட்டில் சுமார் 45 லட்சம் ஓட்டுநர்கள் அகில இந்திய வாகன ஓட்டுநர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர். கரோனா தொற்று காரணமாக வேலை இன்றி இவர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களில் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத ஓட்டுநர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை. எனவே, பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக, உணவிற்கே கஷ்டப்பட்டு வரும் இந்த ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். வட்டி இல்லா கடன் தொகையை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். வாகனங்களுக்கான சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்பட அந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் இதற்கு முன்னதாக, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் அகில இந்திய ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.