காஞ்சிபுரம்: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், வாக்குச் சாவடிக்கு வந்த மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சிரமமின்றி வாக்களிக்க, அவர்களுக்கென சக்கர நாற்காலிகளை ஏற்பாடு செய்து கொடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் இரண்டு சக்கர நாற்காலிகள் ஒதுக்கப்பட்டன.
அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உத்தரமேரூர் ஆலந்தூர் என நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 1,872 வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்காக சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு தேர்தல் வாக்குப்பதிவின் போது பயன்படுத்திய சக்கர நாற்காலிகள் தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார அலுவலகங்களில் கேட்பாரற்று குப்பையாக போடப்பட்டுள்ளன.
அவ்வாறு தற்போது பயனற்று கிடக்கும் சக்கர நாற்காலிகளை தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த சக்கர நாற்காலிகளை தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட வேண்டும் எனவும், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் இரண்டு சக்கர நாற்காலிகளையாவது வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு