காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் கூடுதலாக கட்டப்படும் கட்டட பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பணியினை உடனடியாக தொடங்க வலியுறுத்தி காந்தி ரோடு பெரியார் தூண் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விசிகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
புதுச்சேரி அரசியல் குறித்து தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு இதன்பின்னர் செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் பேசுகையில், "புதுச்சேரியில் பாஜக மிக அநாகரிகமான அரசியலை செய்து வருகிறது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் செய்ததைப்போல தமிழ்நாட்டிலும் அநாகரிக அரசியலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு முன்னோட்டமாகத்தான் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்களையெல்லாம் வளைத்துப்போட்டு பதவியை விலைக்கு வாங்கும் நிலையில் பாஜக இறங்கியிருக்கிறார்கள். இது மிகவும் கீழ்த்தரமான அரசியல். இந்த போக்கை விசிக கடுமையாக கண்டிக்கிறது.கிரண் பேடியை மாற்றியதற்கு என்ன காரணம் எனத் தெரியாது. ஆனால் அங்கே அரசியல் விளையாட்டில் பாஜக இறங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது எனவும், 49.5 விழுக்காட்டைதான் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மோடி அரசு சமூகநீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிரான அரசு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இப்போது உயர் நீதிமன்றம் அந்த நிலைக்கு எதிராக 69 விழுக்காட்டை பின்பற்றச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது. விசிக சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு பெறும் அறிவிப்பை மிக விரையில் வெளியிடுவோம்" என்றார்.
தேர்தல் பரப்புரை குறித்த கேள்விக்கு, "முதலமைச்சர் வேட்பாளர்களை கொண்ட அரசியல் கட்சிகள்தான் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். கூட்டணிக் கட்சிகள் யாரும் பரப்புரையை தொடங்கவில்லை, அதனால் அதற்கு இப்போது அவசரம் இல்லை" எனத் தெரிவித்தார்.இதையும் படிங்க: இந்தியாவை விற்கும் பாஜக - திருமா காட்டம்!