காஞ்சிபுரம் மாநகராட்சியில் 44 வது வார்டுக்கு உட்பட்ட வேதாச்சலம் நகர் பகுதியிலுள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாகரன் (80) மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி (75). இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். இந்த நிலையில் மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் ஹரிகரன் (48) தனது மனைவி வரலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் இதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
ஹரிஹரன் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் பணி செய்து வந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் நகராட்சி தேர்தலில் 44 வது வார்டுக்கு கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஹரிகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மகன் ஹரிகரன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பெற்றோர் கருணாகரன் மற்றும் சிவகாமி ஆகியோர் தனது மகன் ஹரிகரனின் முழு திரு உருவ சிலையை முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கலைக் கூட்டத்தில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்பில் ஹரிஹரனின் உயரமான 5.3 அடி உயரத்தில் தத்துரூபமாக ஹரிகரன் போலவே முழு திரு உருவ சிலையை தயார் செய்தனர். அதன்பிறகு தன் மகனின் சிலைக்கு பேண்ட் சட்டை போட்டவாறு அவருக்கு பிடித்த வண்ணத்தில் வண்ணம் பூசி தாங்கள் வசித்து வரும் வீட்டின் முன்பு ஓர் பகுதியில் அச்சிலையினை பெற்றோர் நிறுவியுள்ளனர்.
இந்நிலையில் ஹரிஹரனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே.9) அவரின் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திறப்புவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. தற்போது ஹரிஹரன் சிலைக்கு அவர்களது பெற்றோர்கள் தினந்தோறும் பூஜை செய்து கற்பூர தீப ஆராதனை காண்பித்து அவரை தங்களது குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வணங்கி வருகின்றனர்.
இறந்த மகனுக்கு தத்ரூபமாக முழு திருவுருவ சிலை அமைத்து தினந்தோறும் பூஜை செய்து வழிபாடும் செய்யும் நெகிழிச்சியான நிகழ்வு அப்பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே...