காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் - சுங்குவார்சத்திரம் சாலை குன்னம் பகுதியில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், செயற்கைக்கோள் தரைதள கட்டுப்பாட்டு மையத்தினை இன்று(ஜனவரி 28) இஸ்ரோ தலைவர் கே.சிவன் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, ஜேப்பியார்கல்லூரி நிர்வாக இயக்குநர் மரிய வில்சன், முதலமைச்சர் மெர்லின் லிவிங்ஸ்டன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டப் பலர் உடனிருந்தனர்.
பின்னர் இது குறித்து ஜேப்பியார் கல்லூரியின் பேராசிரியர் பெனிஸ்ஸா கூறியதாவது, "இஸ்ரோ வரும் பிப்ரவரி 28ஆம் தேதி யூனிட்டி சாட் ஜே.ஐ.டி சாட் எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோளை ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், என்டிஆர்எஃப் எனப்படும் தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மன்றம் அமைப்பு மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் கொண்டு 75 செயற்கைக்கோள்களைத் தயாரித்து விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதற்கான முன்னோட்டமாக கடந்த 2018ஆம் ஆண்டில் எங்கள் கல்லூரியிலேயே மாணவர்கள், ஆசிரியர்களின் முயற்சியால் ஒரு செயற்கைக்கோள் ஆய்வகத்தை அமைத்தோம். அன்றிலிருந்து சொந்தமாக ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வேண்டும் என்ற புதுமுயற்சியுடன் செயல்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, புதிய செயற்கைக்கோள் ஒன்றை நாங்கள் உருவாக்கினோம். எங்கள் கல்லூரியில் உள்ள பல்வேறு துறையைச் சேர்ந்த 12 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து நாங்களே செயற்கைக்கோளை உருவாக்கினோம். எங்கள் செயற்கைக்கோள் 460 கிராம் மட்டுமே எடை கொண்டது.
முக்கியமான இணையதள அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, இணையம் சார்ந்த விஷயங்களையும் செயல்பாடுகளையும் கண்காணிக்க இந்த செயற்கைக்கோளைப் பயன்படுத்தலாம். இதற்காக தரைதள கட்டுப்பாட்டு மையம் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கல்பனா சால்வா நானோ செயற்கைக்கோள் ஆராய்ச்சி நிலையம் என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் மூலம் செயற்கைக்கோள் தரவை கண்காணிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆய்வாளர் சேகரிப்பது உள்ளிட்டப் பணிகளை மாணவ-மாணவிகளும் அறிந்து அடுத்த கட்டத்திற்கு பயணிக்க முடியும்" இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: பருவ மாற்றங்களை கண்டறியும் செயற்கைக்கோள்! பள்ளி மாணவிகள் அசத்தல்!