கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதையடுத்து கரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா நோய் தொற்றுப் பரவல் காரணமாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இலவச கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் மூலமாக இதுவரை சுமார் 75 ஆயிரத்து 40 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 40 இடங்களில் நடைபெற்று வந்த இந்த இலவச கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமானது, தற்போது 55 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மட்டும் 10 இடங்களிலும் நிரந்தரமாக இலவச கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமானது செயல்பட்டு, தொடர்ந்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாமில் பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் நடைபெற்ற இலவசத் தடுப்பூசி சிறப்பு முகாமினையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த முகாமில் தொண்டைமண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிகர் சுவாமிகள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கரோனா தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், இதுவரை 45 ஆயிரத்து 34 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39ஆயிரத்து 913 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 644 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.