கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இங்கு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி அம்மா மினி கிளினிக் அமைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெறும் என்று மக்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அது இல்லை என்று செய்தி காட்டுத்தீயாய் பரவியது.
உடனடியாக இதை கண்டித்து அவ்வூரைச் சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கண்ணன் என்பவர் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி இரண்டு மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் கள்ளக்குறிச்சி அருகே கீழ்பாடி கிராமத்திலும் அம்மா கிளினிக் அமைக்கப்படுவதாக கூறப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்ததாக தெரிகிறது.
ஆனால் விழா ரத்துசெய்ததை அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைப்பதாக கூறி ஏமாற்றிய அதிமுக அரசை கண்டித்து கீழ் பாடி மற்றும் சேஷசமுத்திரம் கிராம மக்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கள்ளக்குறிச்சி பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து நாளை அம்மா கிளினிக் திறக்கப்படும் என துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் உறுதியளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சார் ஆட்சியர் விசாரனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் சேவை' - நாளை தொடக்கம்