கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்தும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ அலுவலரிடம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதுமானதாக உள்ளதா என கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை மணிக்கூண்டு திடலில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.ஜெ. மணிக்கண்ணன் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:பள்ளி வளாகத்தில் அநாவசியமாக நுழைந்தால் கடும் நடவடிக்கை பாயும்!