கள்ளக்குறிச்சி: ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் அடுத்த மாதம் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற நேற்று (செப்.25) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் பல இடங்களில் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றதால் சிலர் போட்டியின்றி தேர்வாகினர்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அலமேலு ஆறுமுகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
அதனால் திமுக வேட்பாளர் அலமேலு ஆறுமுகம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்து தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று (செப்.26) சான்றிதழ் வழங்கினார்.
பளார் என அறைந்த அதிமுக ஒன்றிய செயலாளர்
அப்போது அங்கு வந்த அதிமுகவினர், அதிமுக வேட்பாளர் மனுவை வாபஸ் பெறவில்லை, எப்படி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கலாம் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், திடீரென உதவி தேர்தல் அலுவலர் சாமிதுரையை கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் ராஜசேகரை அலுவலகத்திலிருந்து வெளியேற்றினர்.
இதையும் படிங்க: 'திமுக மக்களை ஏமாற்றுகிறது' - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு