தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் நல்லசாமி ஈரோட்டில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "கேரளா, பிகார் மாநிலங்களைப் போல் மதுவிலக்கு சட்டம், மதுக்கொள்கையில் தமிழ்நாடு முக்கிய முடிவெடித்திட வேண்டும். கேரளாவில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கையில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது என்றுகூறி கள்ளுக்கடைகளை மட்டும் திறக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறந்திட அரசு அனுமதி வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஆறு ஆயிரம் ரூபாய் வழங்கும் முடிவு விவசாயிகளின் தன்னம்பிக்கைக்கு எதிரானது. அரசுத்துறை ஊழியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று நடைமுறைப்படுத்துவதைப் போல் விவசாயக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது. மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14ஐ மதித்திட வேண்டும்.
காவிரி நீர் திறப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தினம்தோறும் நீர்ப்பங்கீடு என்பதால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், இல்லையென்றால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தின் வடிகாலாகத்தான் விளங்கும். காவிரி நீர் திறப்பில் நிரந்தரத் தீர்வு ஏற்பட தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்திட வேண்டும்.
மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக 55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்தியாவில் ஆழ்துளைக் கிணற்றுக்கு தடைவிதிக்க வேண்டும்!'