ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சிக்கோட்டை காவிரிப் பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த திட்டப் பணிகள் முடிவுற்று இறுதிக் கட்டமாக, கடந்த சில நாட்களாக ஊராட்சிக்கோட்டையிலிருந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, இத்திட்டத்திற்காக பொருத்தப்பட்டுள்ள ராட்சத குழாய்களில் செல்லும் தண்ணீரின் வேகம், அழுத்தம் ஆகியவை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் சென்னிமலைச் சாலையில் இணைக்கப்பட்டுள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு, தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டதுடன், உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.