ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகேயுள்ள வெங்கநாயக்கன்பாளையம் பகுதியில் கலராமணி குட்டை அமைந்துள்ளது. இந்தக்குட்டையில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் உடலில் ஆடையில்லாத நிலையில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர் ரத்த காயங்களுடன் கிடந்த சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
முதற்கட்ட விசாரணையில், சிலர் அங்கு மது அருந்தியதற்கான தடயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை