ஈரோடு எஸ்.கே.சி. சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் எட்டாம் வகுப்புவரை 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சுமதி பணிபுரிந்துவருகிறார். இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நற்பண்புகளை வளர்க்கும் நோக்கத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் வழி நடத்திவருகிறார்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம் நேர்மை பண்பை ஊக்குவிக்கும்விதத்தில் 'நேர்மை அங்காடி' என்னும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளியில் ஒரு பெரிய அலமாரி வைக்கப்பட்டு அதில் மாணவ மாணவியர்களுக்குத் தேவையான பேனா, பென்சில், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படும் மாணவர்கள் அதற்குண்டான பணத்தை வைத்துவிட்டு பேனா, பென்சில் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்.
பொருள்களின் விலை வெளியில் விற்கப்படுவதைவிட மிகக்குறைவு. விலைப்பட்டியலும் அந்த அலமாரியில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த அங்காடியை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜலட்சுமி தொடங்கிவைத்தார். இந்த நேர்மை அங்காடியின் எல்லா பொறுப்பும் மாணவர்கள் வசமே விடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் நேர்மை குணத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் மாணவர்களின் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பேரணி