சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடக மாநிலங்களுக்கிடைய 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்றுவருகிறது.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் திம்பம் மலைப்பாதையில் பாரம் தாங்காமல் நின்றுவிடுவதும், கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தது.
அப்போது 21ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதை தடுப்புச்சுவரின்மீது மோதி நகரமுடியாமல் நின்றது. லாரி சாலையோரம் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல் ஆசனூர் அருகே கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க: வெள்ளி அருவி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து