ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது.
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர், சூசையபுரம், பீம்ராஜ்நகர், அருள்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செயல்படாத கல்குவாரிகளில் சிறுத்தை ஒன்று முகாமிட்டு இரவு நேரத்தில் விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி கொன்று வந்துள்ளது.
இதனால் பொதுமக்கள், அப்பகுதி விவசாயிகள் சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். வனத் துறை ஊழியர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அருள்வாடி வனப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் கூண்டுவைத்தனர். ஆனாலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்குக் காட்டிவந்தது.
இந்நிலையில், வனத் துறையினர் கூண்டில் வைத்திருந்த ஆட்டைப் பிடிக்கவந்த சிறுத்தை, இன்று காலை (ஜனவரி 4) சிக்கியது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்துசென்ற ஜீரகள்ளி வனத் துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
கால்நடைகளை அடித்துக் கொன்றுவந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது அப்பகுதி விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி