ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கணக்கரசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மனைவி கிருத்திகா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்குச் சென்று கிருத்திகாவை அழைத்துக்கொண்டு புஞ்சை புளியம்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கிருத்திகாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக புஞ்சை புளியம்பட்டியில் இருந்து வேறொரு 108 ஆம்புலன்சில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மதன்குமார் மற்றும் ஓட்டுநர் சல்மான்கான் ஆகியோர் பணியில் இருந்தனர்.
காசிபாளையம் அருகே சென்றபோது கிருத்திகாவுக்கு 108 ஆம்புலன்சில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவ பணியாளர் மதன்குமார் பிரசவம் பார்த்தார். இதையடுத்து தாயும் சேயும் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தாய், சேய் உடல்நிலை சீராகவும், நலமாகவும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நான் கூப்பிட்டே ஆம்புலன்ஸ் வரல' - ஆட்சியருக்கு ஃபோன் போட்ட அமைச்சர்!