ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதிக்கு சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடக மாநிலம் புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக அரசு, தனியார் பேருந்துகள், சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவிவருவதால் நேற்றுமுதல் (ஏப். 27) 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தமிழ்நாடு பகுதியான தாளவாடி மலைப் பகுதிக்கு, கர்நாடக மாநிலம் வழியாகப் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், தற்போது வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் நேற்று (ஏப். 27) காலை முதல் திம்பம் மலைப்பாதையிலிருந்து அடர்ந்த வனப்பகுதியிலுள்ள தலமலை வனச்சாலை வழியாக தாளவாடி மலைப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
தாளவாடி மலைப்பகுதிக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களும், தலமலை வனச்சாலை வழியாக இயக்க அனுமதி அளித்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு