ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பழைய ஆசனூரைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (65). இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்துவந்தார். தனது மாடுகளை வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, பெரியகாரை என்ற இடத்தில் எதிரே வந்த யானை தாக்கி, இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாடுகள் வீடு திரும்பியும் சிக்கண்ணா வெகுநேரமாக வராத காரணத்தால் அவரை தேடி சென்ற உறவினர்கள் அவர் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
யானை தாக்கி உயிரிழந்தால் வனத்துறையினர் சார்பில் முதலில் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகையும், அதனைத் தொடர்ந்து ரூ.3.50 லட்சம் நிவாரணம் வழங்குவது வழக்கம். ஆனால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என்பதால் இழப்பீடு தர மறுப்பதாக வனத்துறையினர் மீது சிக்கண்ணா உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அடர்ந்த காட்டுப்பகுதியில் யானை தாக்கி உயிரிழந்தால் இழப்பீடு வழங்க இயலாது எனத் தெரிவித்தனர்.
அதேபோல், கடந்த மாதம் சுஜல்குட்டை வனத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிந்துள்ளார், பழங்குடியினர் வனபொருள்கள் சேகரிப்பு, கால்நடை வளர்ப்பு தொழிலாக கொண்டுள்ள அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என பழங்குடியினர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மருதமலை அடிவாரத்தில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை!