கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை கூலித்தொழிலாளர்கள் 100 நாள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் குளம், குட்டைகள் தூர்வாருதல், சாலைப்பணிகள், நீர்நிலைகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இத்தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய மூன்று வட்டாரங்களில் உள்ள 40 கிராம ஊராட்சிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.
இது குறித்து தொழிலாளர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியும் இதுவரையிலும் நிலுவை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த 40 கிராம ஊராட்சிகளிலும் உள்ள ஐந்தாயிரம் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு அலுவலர்கள் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:நிதி நிறுவனம் 1 கோடி மோசடி: 100 பேர் நாமக்கல் ஆட்சியரிடம் புகார்!