ஈரோடு: பவானி கூடுதுறை பகுதியில் பழமையான காளிங்கராயன் அணைக்கட்டு உள்ளது. கன மழை காரணமாக கொடிவேரி அணைக்கட்டில் இருந்து 1,590 கன அடி தண்ணீரும், குண்டேரிப்பள்ளம் அணை, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை தண்ணீர், அந்தியூர் பெரிய ஏரி வழியாக ஆப்பக்கூடல் ஏரிக்கு வந்து, இறுதியாக பவானி ஆற்றில் வெளியேறும் தண்ணீரால் தற்போது காளிங்கராயன் அணை கட்டிற்கு 7,757 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி உபரி நீரால் காவிரியில் இருகரைகளையும் தொட்ட படி வெள்ளம் ஆர்பரித்து செல்கிறது. இதனால் பவானி நகரில் காவிரி கரையோரத்தில் கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதி, செம்படவர் வீதி உள்ளிட்ட இடங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்த ஆண்டில் 4 வது முறையாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது வரும் உபரி நீரால் அடிக்கடி குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவ மாணவிகள், பணிக்குச் செல்ல வேண்டியவர்கள் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் கூறினர். இங்குள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு