ஈரோடு மாவட்டம் பவானி அருகேவுள்ள சின்னபுலியூரில் இயங்கிவரும் பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட்டின், இணை நிறுவனமான சிவா கார்கோ மூவர் பிரைவேட் லிமிடெட் ஆலையில் 38 ஓட்டுநர்கள் தினக்கூலி அடிப்படையில், 6 முதல் 30 ஆண்டுகள் வரை பணியாற்றி வருகின்றனர்.
இங்கு பணி புரியும் ஓட்டுநர்கள் தங்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்காமல் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்குவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட சம்பள பட்டியல் வழங்க வேண்டியும், ஊழியர்களுக்கு வேலை நிரந்தரம், நிரந்தர சம்பளம் மற்றும் ஓட்டுநர்களுக்கு தொழிற்சாலை வளாகத்தில் ஓய்வறை வசதி, போக்குவரத்து படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை முன்புள்ள ரோட்டில் அமர்ந்து தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னபுளியூர், பெரிய புலியூர், பூலப்பாளையம், கவுந்தப்பாடி, கோபி, வைரமங்கலம், காலிங்கராயன்பாளையம், நல்லி கவுண்டனூர், அய்யம்பாளையம், குண்டு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 38 ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆலை நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை தங்களது போராட்டத்தை தொடரப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வெள்ளத்தால் சூழ்ந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு!