ஈரோடு: சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. அபாயகரமான வளைவுகளுடன் கூடிய இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இயந்திர உதிரிபாகங்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரி திம்பம் மலைப்பாதை 6ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தலைக்குப்புற கவிழ்ந்த கண்டெய்னர் லாரி
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வருமா... வராதா' - மீண்டும் கள்ளன் திரைப்படத்திற்கு தடையா?