சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கோபாலகிருஷ்ணன். அப்படத்தில் சசிகுமாரின் மாமா வேடத்தில் நடித்திருந்தார். அரசு பணியில் இருப்பவருக்குதான் தனது பெண்ணை திருமணம் செய்துக் கொடுப்பேன் என்று கூறி சசிகுமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிடுவார். இவரது கதாப்பாத்திரமும், நடிப்பும் பாராட்டுகளை பெற்றன.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபாலகிருஷ்ணன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரோடு அருகே உள்ள அவரது சொந்த ஊரான குப்பகவுண்டன்பாளையத்தில் அவர் உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துரையினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இவர் சமீபத்தில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்திருந்தார்.