ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தில் நேற்று முன்தினம் (மே. 4) மாலை வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மணிமேகலை (63) கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த 6 அரை சவரன் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி மணிமேகலையின் மகள் ராணி ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பிரபுவை கைது செய்தனர். அவரிடமிருந்து 4 சவரன் நகை, 29 ஆயிரம் ரூபாய் பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், வாடகை கார் ஓட்டுநரான பிரபு அடிக்கடி கார் ஓட்டுவதற்காக மணிமேகலை வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது. மேலும் மணிமேகலை வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் பிரபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவரை கைது செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் 6½ சவரன் நகைக்காக கொல்லப்பட்ட மூதாட்டி!