திண்டுக்கல்: கொடைக்கானலில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார்.
இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் மேல்நிலை கல்வி தமிழ்நாட்டில் துவங்கப்பட்டு 45 ஆண்டுகள் ஆகியும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களை நெறிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.
தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களைத் தோற்றுவித்துப் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இதே போலக் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பன போன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் தங்கமணி ”மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அரசு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள் நடைபெறுகிறது. முதற்கட்டமாகக் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது. வரும் 9ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும், சென்னையில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோயில் பூசாரி தற்கொலை வழக்கு; ஓபிஎஸ் தம்பி நீதிமன்றத்தில் ஆஜர்!