திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். கொடைக்கானலில் முதல் சீசன் ஏப்ரல் மாதம் 2 தொடங்கி மே மாதம் இறுதியில் முடிவடையும்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வந்த கரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தற்போது 2வது சீசன் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆரம்பிக்கபட உள்ள நிலையில் 5ஆம் கட்ட தளர்வுகளில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வரலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
தொடர்ந்து தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனால் முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. முக்கிய தலங்களான மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரகாடுகள், பில்லர்ராக், பேரிஜம் ஏரி, மதிகெட்டான் சோலை , மன்னவனூர் ஏரி, கரடி நீர்வீழ்ச்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா தலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு கடைகள் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் நம்பி உள்ள இவர்கள் 8 மாதங்களாக எந்த ஒரு மாற்று தொழிலும் இல்லாமல் இருந்து வருகின்றனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கபட்டால் மட்டுமே கொடைக்கானல் முழுவதும் வாழ்வாதாரம் இழந்து வந்த சிறு வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் என பலரின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒரு சில சுற்றுலா இடங்களை ரசித்து வரும் நிலையில் தற்போது வனத்துறை கட்டுப்பாடில் உள்ள சுற்றுலா இடங்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க வேண்டும் என பொதுமக்கள், சிறுவியாபாரிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமாவளவனை திமுக., காங்கிரஸ் கண்டிக்காதது ஏன்? நடிகை குஷ்பு கேள்வி