சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பணிகளை மேற்கொள்ள செயல் அலுவலர் உள்ளார். கோயிலின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆன்மிக சிந்தனையுள்ள பரம்பரை வழி சாரா தக்கார் நியமிக்கப்படுவர். இவருடன் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அறங்காவலர் குழு செயல்படும். இவர்கள்தான் கோயிலின் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள முடியும். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தக்கார் மற்றும் அறங்காவலர் குழுவினர் நியமனம் இல்லை.
செயல் அலுவலரே, தக்கார் பணியையும் சேர்த்து கவனிக்கிறார். அரசால் பணி நியமனம் செய்யப்பட்ட செயல் அலுவலர், தக்காராக பணியாற்ற முடியாது. தக்கார் மற்றும் அறங்காவலர் குழு நியமனம் செய்யாததால், நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, பழனி கோயிலின் செயல் அலுவலர், தக்காராக செயல்படும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நிர்வாகங்களை மேற்கொள்ள அறங்காவலர் குழுவை நியமிக்கவும், அதுவரை கோயில் நிர்வாக பணிகளை உயர் நீதிமன்றம் மேற்பார்வையில் மேற்கொள்ள சிறப்புக்குழுவையும் நியமிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று (மார்ச்.16) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், “பக்தர்களின் நலன் கருதி சில உத்தரவுகளை பிறப்பிக்க இந்த நீதிமன்றம் விரும்புகிறது. கோயிலின் வருவாய் மற்றும் வரவு-செலவு கணக்கை மூன்றாம் தரப்பு நபர் மூலம் மறு தணிக்கை செய்யலாமா. கோயில் சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை வலைதளங்களில் வெளியிடலாமா.
பெரிய கோயில்களில் அறங்காவலர்களை அரசே நியமிக்கலாம். இதற்கென எந்தவித வழிகாட்டுதலும் இல்லை. எனவே, வழிகாட்டுதல்களை இந்த நீதிமன்றமே வழங்கலாமா அல்லது ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு வழிகாட்டுதல்களை ஏற்படுத்தலாமா என்பது குறித்து கோயில் தரப்பு, மனுதாரர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்க வேண்டும்” எனக் கூறி மனு மீதான விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு