திண்டுக்கல் - திருச்சி சாலை விரிவாக்க பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இதற்காக திண்டுக்கல் - திருச்சி சாலையின் ஓரங்களில் அமைந்துள்ள பழமையான வேப்பமரம், புளியமரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஆக. 27) பகல் பொழுதில் திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே உள்ள ஒற்றை பனை மரத்தை அகற்றும் பணியில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எந்த முன்னறிவிப்பும், பாதுகாப்பும் இன்றி பனைமரத்தை அடியில் வெட்டி கயிறு மூலம் இழுத்தனர். இதில் பனை மரம் முழுவதுமாக சாலையின் குறுக்கே சரிந்தது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்தன.
தொடர்ந்து சாலையின் குறுக்கே இருந்த பனைமரம் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசல் சீரடைந்தது. ஆனால் நகரின் மையப் பகுதியில் மக்கள் அதிகம் செல்லும் பகல் வேலையில் மரம் வெட்டு பணிகளை மேற்கொள்வது நேர விரையம் மட்டுமின்றி பாதுகாப்பு அற்றது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே நகர் பகுதியில் குறைந்த அளவிலான மரங்களே உள்ளன. இந்நிலையில், பழமையான மரங்கள் வெட்டப்படுவதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். இதற்கு மாற்றாக அந்த மரங்களை வேறு இடங்களில் வேரோடு நட்டு இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...விவசாயத்தை மேம்படுத்தும் சேலம் மாணாக்கர்களின் புதிய கண்டுபிடிப்புகள்!