ஆந்திராவிலிருந்து பழனிக்கு கஞ்சா கடத்திவருவதாக பழனி காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தாலுகா சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தலைப் பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவா உத்தரவிட்டார்.
இதனையடுத்து, சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த மதுரையைச் சேர்ந்த தங்கவேல் (42), வினோத்ராஜ் (30) ஆகியோரை விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலத்திலிருந்து திருப்பூருக்குப் பருத்தி லோடு ஏற்றிச் சென்றபோது, காக்கிநாடா அருகில் உள்ள துணி என்ற ஊரில் லாரியை நிறுத்தி பழனியை விஜயானந்த் (42), சிரஞ்சிவி (36), ராஜ்குமார் (36) ஆகியோருடன் இணைந்து கஞ்சாவை லாரியில் கடத்திவந்து பழனியில் ஒப்படைக்க இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சா கடத்தலை உறுதி செய்துகொண்ட காவல் துறையினர் செம்பட்டி அருகே பருத்தி ஏற்றிவந்த ஈச்சேர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், பருத்திக்கு இடையில் 33 பொட்டலங்களில் கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது.
தொடர்ந்து லாரியை ஓட்டிவந்த இருவர், தனியாக காரில் வந்த மூவர் என ஐந்து பேரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். லாரியிலிருந்து தலா 2.200 கிலோ எடையுள்ள 33 பொட்டலங்களாக 70 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, கார் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.