கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனா்.
அப்போது முதலமைச்சர் பேசுகையில், "தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சிறப்பு நலத்திட்டங்களை செயல்படுத்திவருகின்றது.
![முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு தருமபுரி முதலமைச்சர் பழனிச்சாமி பேச்சு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேச்சு Tamil Nadu Chief Minister Edappadi K. Palanisamy Speech Dharmapuri Chief Minister Palanisamy's speech Chief Minister Edappadi K. Palanisamy Speech](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6295023_dpi1.jpg)
அதிமுக பற்றி திட்டமிட்டு அவதூறு பரப்புபவர்களுக்கு அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும். அதிமுக ஒடுக்கப்பட்ட, நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவையாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது வாழ்நாள் லட்சியங்களை நிறைவேற்றுவதே இந்த அரசின் கடமை. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதில் அதிமுகவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
இதைத் தொட்ர்ந்து, தருமபுரி மாவட்ட எல்லையில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க:பேருந்து வசதி வேண்டும்: மாணவர்கள் சாலை மறியல்