தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை இலை என்பவரின் மனைவி பைரவி (37). கூலி தொழில் செய்துவரும் இவருக்கு குமரன் (15), லோகேஷ் (12) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இரட்டை இலை குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வழக்குரைஞரான முனுசாமி (45) என்பவருக்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த இரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(ஜன.15) பைரவி தற்கொலை செய்து கொண்டதாக, காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற பாலக்கோடு காவல்துறையினர் கருகிய நிலையில் இறந்து கிடந்த பைரவி உடலை மீட்டனர்.
பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, பைரவியின் இடுப்பு பகுதிக்கு மேல் முற்றிலுமாக எலும்புகள் உருக்குலைந்து இருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து, ஆய்வாளர் மனோகரன், துணை காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், வட்டாட்சியர் ராஜா, தடவியல் நிபுனர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பைரவியை வழக்குரைஞர் ஆசிட் ஊற்றி எரித்ததாகக் கூறி அப்பகுதி கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரை முற்றுகையிட்டு, முனுசாமியை கைது செய்யும் வரை பைரவின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்ற அனுமதிக்கமாட்டோம் என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, உடலை பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக, துணை காவல் கண்காணிப்பாளர் உறுதி அளித்ததை அடுத்து, பொது மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, பைரவி உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த பாலக்கோடு காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். பெண் திடீரென இறந்தது அப்பகுதியினரிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.