தருமபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற அதியமான்கோட்டை கால பைரவர் ஆலயத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இன்று தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சேலம், நாமக்கல், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் கால பைரவர் ஆலயத்திற்க்கு வந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்துசமய அறநிலையத் துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவ பொது சுகாதாரத் துறை பணியாளர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளில் கிருமி நாசினி தெளித்து, ஒவ்வொரு பக்தருக்கும் தனித்தனியே, காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதனை செய்த பின்பே கோயிலுக்குள் அனுமதித்தனர்.
மேலும், கோவிலுக்கு பக்தர்கள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். குருக்கள், பணியாளர்கள் அனைவரும் தங்கள் முகங்களில் பாதுகாப்பு முகக்கவசத்தை அணிந்துகொண்டிருந்தனர். தொடர்ந்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயிலைச் சுற்றிவருவது தடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் ஒன்றுசேர்ந்து உட்காருவது, கூட்டம் சேர்ந்து கோயிலைச் சுற்றிப்பார்ப்பது போன்றவற்றிற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் விரைவாக சாமி தரிசனம்செய்து அவர்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
குறிப்பாக, கால பைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சாமி தரிசனம்செய்ய குறைந்தது 6 மணி நேரம் காலதாமதம் ஆகும். ஆனால் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் கோயிலுக்கு வருவது குறைந்ததன் காரணமாக ஐந்து நிமிடத்திலேயே சுவாமியைப் பார்த்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை: பொதுமக்களுக்கு கடலூர் ஆட்சியர் துண்டுப்பிரசுரம்