தர்மபுரி: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி, தர்மபுரி அடுத்த தடங்கம் மைதானத்தில் 2ஆவது ஆண்டாக இன்று (பிப்.2) சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை 8 மணிக்கு, வீரர்கள் உறுதிமொழி ஏற்று, போட்டியை தர்மபுரி மாவட்ட சார் ஆட்சியர் சித்ரா விஜயன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முதலில் வாடிவாசல் வழியாக கோயில் காளை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பங்கேற்க வந்த காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் திமிலைப் பிடித்து தழுவ முயன்றனர். மொத்தம் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகள், மாடு பிடி வீரர்களுக்குத் தங்கம், வெள்ளிக் காசுகள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பொருட்களும், ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுப்போட்டி மைதானத்தில் 10 மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 400 காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுப்போட்டியை அப்பகுதி, சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறை தேர்வில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி!