தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேற்று (பிப்.27) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது . மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரூர், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட தொடங்கியுள்ளது.
அரசு அலுவலகங்களில் உள்ள விளம்பரங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள விளம்பரங்கள் 48 மணி நேரத்திலும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பர பலகைகள் 72 மணி நேரத்திலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளம்பரப் பலகைகள் அகற்றாத இடங்களில் வருவாய் துறை மூலம் அகற்றி அதற்கான தொகை உரிமையாளரிடம் வசூலிக்கப்படும்.
கரோனா தொற்று காரணமாக வாக்காளர்களுக்கு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 1817 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அதில் 56 மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 344 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து, எதிர்வரும் சட்டபேரவை பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தேர்தலில் கட்சிகளின் பயணம்