கடலூர்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்தது. இந்த குழு கடந்த 7, 8ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு சென்று விசாரணை நடத்தியது. அறநிலை துறை இணை ஆணையர் லட்சுமணன் நடராஜன் மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் ஆய்வுக்காக செனறனர்.
அப்போது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொது தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்காமல் செயல் அலுவலகத்தை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆய்வுக் குழு திரும்பிச் சென்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்றும்,இன்றும் நடராஜர் ஆலயம் தொடர்பான மனுக்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய மனுவை வழங்கி வருகின்றனர்.
இந்து அறநிலை துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரன் இணை ஆணையர் லட்சுமணன் மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன் விசாரணைக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவிடம் பொதுமக்கள் தங்களை மனுக்களை அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் தங்கள் மனுவை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் இணையதளம் வழியாக தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மரிய மதலேனாள் ஆலய திருவிழா: அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து சாலை மறியல்