கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளியான இவரது மகன்கள் வினோத்குமார்(21) சதீஷ்குமார்(19) இருவரையும் 2016ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் கொலையான சதீஷ்குமார், சம்பவத்திற்கு முதல்நாள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றார். அப்போது அவரை லட்சுமணன் என்பவர் நிறுத்தி ஏன் வேகமாக செல்கிறாய் என்று கேட்டு, பெண்கள் முன்னிலையில் தாக்கினார். இதனால் சதீஷ்குமார் அவரது அண்ணனுடன் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார் என்ற பயத்தில் லட்சுமணன், 10 பேருடன் இணைந்து வினோத்குமார், சதீஷ்குமார் இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (40) டேவிட்ராஜ் (26) பாலமுருகன் (28) சௌந்தரராஜன் (23) அருண்குமார்(26) சதீஷ் (24) ஆனந்தராஜ் (24) ராஜ்குமார்(24) கணபதி (23) சுமன் (25) ஆகிய 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்தக் கொலை வழக்கின் விசாரணையானது கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே பிணையில் வெளிவந்த லட்சுமணன், டேவிட்ராஜ், சதீஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமறைவாகினர். இதனையறிந்த காவல்துறையினர் தனிப்படை ஒன்றினை அமைத்தனர். பின்னர் வேப்பூர் கோழி சந்தையில் பதுங்கியிருந்த லட்சுமணன், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் செங்கல் சூளையில் பதுங்கியிருந்த இதர மூன்று பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் வாசித்தார். இதில் முக்கிய குற்றவாளியான லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 7500 அபராதமும், டேவிட்ராஜ், பாலமுருகன், சௌந்தரராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 4500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
இதையும் படிங்க: தம்பியை கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஓட்டம்!