கடலூர் தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சைப் பெற்று குணமடைந்த நபர்களை மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன் உற்சாகப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பிவைத்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வி. அன்புச்செல்வன் தெரிவித்ததாவது, “கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக தமிழ்நாடு அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 413 பேர் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதில் கடலூர் அரசு மருத்துவமனையிலிருந்து 84 நபர்கள், சிதம்பரம் அரசு மருத்துவமனையிலிருந்து 28 நபர்கள், ராஜ முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து 34 நபர்கள் என மொத்தம் 146 பேர் குணமடைந்து இன்றைய தினம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 169 நபர்களும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கரோனா சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் அவர்களது வீடுகளுக்குச் சென்று தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், பொதுமக்களுடன் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இன்னும் சில தினங்களில் கடலூர் மாவட்டம் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தூத்துக்குடியில் லாரி ஓட்டுநர் உயிரிழப்பு!