கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் - வால்பாறை சாலையில் அமைந்துள்ளது, குரங்கு அருவி எனப்படும் கவியருவி. இந்த கவி அருவி ஆனைமலைப் புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்பொழுது அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு குழந்தைகளுடன் அருவியில் குளித்து வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வால்பாறை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்த கனமழையால் கவியருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியில் அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு சுவர் கம்பிகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
அதனால், தற்பொழுது வனத்துறையினர் வெறும் மூங்கில் குச்சிகளை வைத்து அருவியில் பாதுகாப்பிற்காக கட்டி உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பின்றி குளித்து வருவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கூடிய விரைவில் வனத்துறையினர் பாதுகாப்புச் சுவர் அமைத்து தர வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.