கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன் மதுபோதை மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்காக சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்களுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு சிகிச்சை பெற வருபவர்களுக்கு உற்சாக மூட்டும் வகையில் தொலைக்காட்சிப்பெட்டி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டு தற்போது தொலைக்காட்சி பொருத்தப்பட்டுள்ளது.
போதை ஒழிப்பு மையத்தில் சிகிச்சைக்கு வருபவர்கள் பல்வேறு விதமான மன நிலையில், வருவதால் இவர்களுக்கு தியானம், யோகாசனம், மனநல ஆலோசனைகள் இவற்றுடன் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு போதையில் இருந்து மீட்கப்படுகின்றனர். போதைக்கு அடிமையாகி மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்படுபவர்களை சாந்தப்படுத்தும் வகையில் மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்படுகிறது.
சிகிச்சைக்கு வருபவர்களின் நிலையைப் பொருத்து 15 நாள்கள் முதல் 30 நாள்கள் தங்கியிருந்து ‘சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் ஒரு சில நேரங்களில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இறுக்கமான சூழல் ஏற்பட்டு மருத்துவர்கள், கண்காணிப்பளர்களிடம் வாக்குவாதம் செய்வது, வெளியே செல்ல நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனைத் தவிர்க்கும் விதமாக போதை ஒழிப்பு மையத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் படங்களை கண்டுகளித்து மன இறுக்கத்தில் இருந்து விடுபட முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே போல் சதுரங்கம், கேரம் போர்டு போன்ற உள்விளையாட்டு அரங்கில் விளையாடக் கூடிய விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க:TNPSC அறிவிப்பு: தமிழகத்தில் நிலுவையில் உள்ள அரசு பணிகள் நிலை? 40 லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக்குறி