தமிழ்நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய நெருக்கடி, பள்ளி மாணவர்கள் தேர்வு முதல் கல்லூரி மாணவர்கள் தேர்வு வரை நிறுத்திவைத்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் அத்தேர்வுகள் 11ஆம் வகுப்புக்கு ஜூன் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வினை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக கோவையிலிருந்து அரசின் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஒரு மாணவி உள்பட எட்டு மாணவர்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
சென்னை செல்லும் அரசின் சொகுசு பேருந்தில் உதகையைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட மூன்று மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த பேருந்து திருப்பூரில் எட்டு மாணவர்களையும், ஈரோட்டில் 18 மாணவர்களையும் அழைத்துச் சென்று நாமக்கல்லில் ஆறு மாணவர்களை இறக்கிவிட்டது. இது குறித்து அலுவலர்கள் கூறும்போது, இந்த பேருந்து 24 மாணவர்களுடன் சென்னை செல்லவிருக்கிறதாகத் தெரிவித்தனர்.
இதேபோல் தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஒரு மாணவனையும், திருவள்ளூர் பூந்தமல்லி கண் பார்வையற்றோருக்கான பள்ளியில் தேர்வு எழுத பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் இருந்து நான்கு மாணவர்களையும் அனுப்பிவைத்தனர்.
இந்த பேருந்து சேலத்தில் எட்டு, தருமபுரி எட்டு, கிருஷ்ணகிரி நான்கு என மொத்தமாக 24 கண் பார்வையற்ற மாணவர்களை பூந்தமல்லி கண் பார்வையற்றோர் பள்ளிக்கு 11ஆம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக அழைத்து செல்ல இருப்பதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் பணிக்கு வர வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு!