கோயம்புத்தூர்: சித்தாபுதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. "ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மொழி என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிர். அதுதான் அடையாளம், இலக்கியம், வரலாறு எல்லாம். உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ், உலகில் தோன்றிய முதல் மாந்தன் தமிழன். இந்தியா முழுவதும் தமிழை கொண்டவர்கள் தான் பரவி வாழ்ந்தனர். தமிழ் தான் இறைவனால் பேசப்பட்டது, தமிழ் தெய்வத்தின் மொழி. தமிழ் மொழி வழிபாட்டை வெளியேற்றிவிட்டு சிவனுக்கு முன்பு சமஸ்கிரதத்தில் வழிபாடு செய்யப்படுகிறது.
திருவாசகம் பாட வேண்டிய இடத்தில் ஏதோ ஒரு மொழியில் நாம் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். உறங்கும் பொழுது வரும் கனவு எந்த மொழியில் வருகிறதோ, அதுதான் கல்வி மொழியாக இருக்க வேண்டும். உறங்கும் பொழுது வரும் கனவு ஆங்கிலத்தில் வந்தால் நீ என் இனத்தைச் சேர்ந்தவன் அல்ல நீ சுவரம் போய்விட்டாய், இனம் மாறிவிட்டார் உன் ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். உலகம் முழுவதும் அவரவர் தாய்மொழியின் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. காமராஜர் ஆட்சி காலம் வரை தமிழ் பயிற்று மொழியாகவும் பாட முடியாத ஆங்கிலமும் இருந்தது, பிறகு பாடமொழி தமிழாகவும் பயிற்று மொழி ஆங்கிலமாகவும் இருக்கிறது. பின்பு விருப்பம் மொழி தமிழாக இருந்தது எந்த தமிழனும் விரும்பவில்லை மொழி இறந்து விட்டது.
தமிழர்களுக்கு கடவுள் கிடையாது தெய்வங்கள் தான் உள்ளது, தெய்வமே என்பது எப்படி உருவாகிறது என்றால் எழுத்தறிவித்தவன் இறைவன், எழுத்தறிவித்தான் இறைவன் அவ்வளவு தான். எங்களைப் பொறுத்தவரை இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் இதுதான் எங்கள் கோட்பாடு. இந்திய நிலப்பரப்பு அடிமைப்பட்டு கிடக்கும் பொழுது எங்களுடைய தாத்தாக்கள் எங்களுக்கு செய்த துரோகம் முத்துராமலிங்க தேவரும் பெருந்தலைவர் காமராஜரும் செய்த துரோகம். விடுதலைக்காக போராடும் பொழுது ஆர்எஸ்எஸ் பிஜேபியில் இருந்த ஒருவரும் போராட்டம் நடத்தவில்லை. 1946ல் வரவேண்டிய விடுதலை 1947க்கு தள்ளப்பட்டதற்கு ஜின்னா தான் காரணம்.
ஜின்னா தனி நாடு கேட்கும்போது எங்கள் தாத்தாக்கள் தனி தமிழ்நாடு கேட்டிருந்தால் மவுன்பேட்டன் பிரபுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அப்போதே தமிழ்நாடு கேரளாவா கர்நாடகாவா என்று தனித்தனியாக பிரித்துக் கொடுத்துவிட்டு சென்றிருப்பார். தமிழ் வாழ வேண்டும் என்றால் தமிழன் ஒருவன் ஆள வேண்டும். அதற்கு நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் கோட்பாடு. சும்மா பேசிக்கொண்டே இருப்பவன் தானே நான் என்று தானே அனைவரும் நினைக்கிறீர்கள். என்னை கைது என்று சொல்லுவார்கள் ஜெயிலில் போடுவார்கள், ஜெயில் கட்டியதே எங்களுக்காகத்தான். தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்று பலரும் கேட்கிறார்கள் தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும் என்ற நிலைப்பாட்டை நான் உருவாக்குவேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் எதற்கும் கையெழுத்திடாமல் சேட்டை செய்கிறார் என்று கூறுகிறார்கள் ஒரு இரண்டு மூன்று வருடம் பொருங்கள் நான் வந்து விடுகிறேன், முடிந்தால் இதே ஆளுநரை நியமியுங்கள், நான் வந்தால் ஆளுநர் மாளிகையை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு விடுவேன், மின் இணைப்பு தண்ணீர் தொடர்பை துண்டித்து விடுவேன். மக்களால் நிறுவப்பட்ட ஆட்சிக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமன உறுப்பினரான ஓசி சோறு சாப்பிடும் இவருக்கு (ஆளுநர்) எதற்கு இவ்வளவு அதிகாரம். தற்பொழுது தமிழை விட்டுவிட்டு தங்கிலீஷில் பேச தொடங்கிவிட்டீர்கள், நீங்கள் தமிங்கிலர்கள், எனவே இது தமிழ்நாடு அல்ல, தமிங்கில நாடு. தமிழை மீட்க எம்ஜிஆர் போட்ட சட்டத்தை மறுபடியும் புதுப்பித்து கருணாநிதி, ஜெயலலிதா விட்டு சென்றதைப் போல் விட்டு விட மாட்டேன்.
அதற்காக தமிழ் மீட்சி படை என்ற ஒன்றை நான் வைத்திருப்பேன், சொல்லி சொல்லி பார்த்துவிட்டு கேட்கவில்லை என்றால் தமிழ் மீட்சி படையை கொண்டு அந்த கடையை உடைத்து விட்டு தமிழில் பெயர் பலகை வைக்க சொல்லுவேன். இல்லையென்றால் மின்சாரத்தை துண்டித்து விட்டு, கடையை பூட்டி சீல் வைத்து விடுவேன். இங்கு முதலில் தோன்றியது மொழி அந்த மொழியை பேசக்கூடிய மக்களின் கூட்டம் இனம் அதன் பிறகு வெறும் 3000 வருடத்திற்கு முன்புதான் தோன்றியது இந்த சாதி மத கோட்பாடு எல்லாம். என் இனத்திற்கு எதிராக என்னைப் பெற்ற தாய் தந்தையே வந்தாலும் எனக்கு எதிரி தான். தண்ணீரில் உள்ள மினரலை எடுத்து விட்டு தான் மினரல் வாட்டர் என்று விற்கப்படுகிறது, எனவே தண்ணீர் நஞ்சாகிவிட்டது. உணவு நஞ்சாகி விட்டதால் பெரும்பாலும் மக்களுக்கு புற்றுநோய் வருகிறது, மரபணு மாறிவிட்டது.
இனத்தின் விடுதலை என்பதுதான் எங்கள் இலக்கு, இனம் ஒன்றாகும் இலக்கு வென்றாவோம். அரசு சாராயம் இருக்கின்ற பொழுது அரசு சாப்பாடு போடுகின்ற வேலை செய்யக்கூடாதா அதை நான் செய்வேன். ஆடு மாடுகளை வளர்ப்பேன், அரசு பணியையும் அறிவிப்பேன். காலையில் உப்புமா கிடையாது என் பிள்ளைகளுக்கு உயர்ந்த உணவு வழங்குவேன். பல்வேறு அங்காடிகளை திறப்பேன் நாடெங்களும் சம விலை என்பதை உருவாக்குவேன். படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவேன். ஒரு ஐந்து ஆண்டு மட்டும் என்னை ஆட்சியில அமரவையுங்கள். எனக்கு இந்தியாவின் RAW, இந்தியா உழவு படை இந்திய ராணுவம், தமிழ்நாடு காவல் துறை என அனைத்து இடங்களிலும் எனக்கு ஆள் இருப்பது போல் உலகம் முழுவதும் எனக்கு ஆள் உள்ளார்கள்.