கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தனியார் பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாகா பயிற்சி நடைபெற்றுவருகிறது. இதற்குப் பல்வேறு திராவிட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. நேற்று (டிசம்பர் 30) விளாங்குறிச்சி பகுதியில் தனியார் பள்ளியில் அந்தப் பயிற்சி நடைபெறும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அந்தப் பயிற்சி முகாமை பள்ளிகளில் நடத்துவதற்குத் தடைவிதிக்க வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், “கல்வி பயிலும் பள்ளிகளில் இதுபோன்ற மத சார்பிலான பயிற்சிகள் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.
பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு பாஜகவினர் 300-க்கும் மேற்பட்டோர் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது கோவை மாவட்ட காவல் துறையினர் அமைதியாக இருந்துவிட்டு தங்களை ஆர்ப்பாட்டம் செய்வதற்குகூட விடாமல் உடனடியாகக் கைதுசெய்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இதுபோன்ற மதவெறியைத் தூண்டும் பயிற்சியை பள்ளிகளில் நடத்த தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள்: ஸ்டாலின் தொடங்கிவைப்பு